எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

H12) ருக்னுல் யமானியை முத்தமிடுதல்

 ருக்னுல் யமானியை முத்தமிடுதல்


கஃபாவுக்கு நான்கு மூலைகள் இருப்பதை நாம் அறிவோம். ஆனால், உண்மையில் அரை வட்டப் பகுதியையும் சேர்த்துப் பார்த்தால், இரண்டு மூலைகள் தான் இருக்க வேண்டும். அரை வட்டமான பகுதிக்கு எதிர்ப்புறம் அமைந்த இரண்டு மூலைகளில் ஒரு மூலையில் ஹஜருல் அஸ்வத் பதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு மூலை ருக்னுல் யமானி என்று கூறப்படுகின்றது. இந்த ருக்னுல் யமானி என்ற மூலையையும் தொட்டு முத்தமிடுவது நபி வழியாகும்.


”நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நான்கு மூலைகளில் யமானி எனப்படும் இரண்டு மூலைகளைத் தவிர மற்ற இரண்டு மூலைகளைத் தொட்டு நான் பார்த்ததில்லை.”


அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


நூல்: புகாரி 166, 1609


சைகை செய்வது கூடாது


ஹஜருல் அஸவத்தை தொட இயலாவிட்டால் சைகை செய்யலாம். நபியவர்கள் இப்படிச் செய்திருக்கிறார்கள். ஆனால் ருக்னுல் யமானிக்கு உரிய சட்டம் வேறு. ருக்னுல் யமானியை தொட வாய்ப்புக் கிடைத்தால் தொட்டு முத்தமிட்டுக் கொள்ளலாம்.


ஆனால் (1) அதை நேரடியாக வாயை வைத்து முத்தமிடுவதோ, (2) அல்லது தடியை வைத்து தொட்டு முத்தமிடுவதோ, (3) அல்லது சைகை செய்து தக்பீர் கூறுவதோ நபிவழியல்ல. கையால் அதனை தொட்டு, கையை முத்தமிடுவது மட்டுமே நபிவழி.


வணக்க வழிபாடுகளில் கியாஸ் அடிப்படையில் சட்டம் எடுக்கக் கூடாது. கூட்ட நெரிசலின் காரணமாக, ருக்னுல் யமானியை தொட இயலாவிட்டால், விட்டுவிட வேண்டியது தான்.


ஏனெனில், ”எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி இறைவன் சிரமப்படுத்த மாட்டான்” என்று திருக்குர்ஆன் கூறுகிறது. (பார்க்க திருக்குர்ஆன் 2:233, 2:236, 5:6, 6:152, 7:42, 23:62, 65:7)

No comments

Powered by Blogger.